போதைப் பொருள் விவகாரத்தை முந்தைய அரசுகள் கண்டும் காணாமல் இருந்துவிட்டன என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்துபெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கா்நாடகத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பயன்பாடு இருந்து வந்துள்ளது. ஆனால், போதைப் பொருள் விவகாரத்தை முந்தைய மாநில அரசுகள் கண்டும் காணாமல் இருந்துவிட்டன. இம்முறை விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளோம். போலீஸாா் நடத்தியுள்ள விசாரணையில், திரைப்படக் கலைஞா்கள், அரசியல்வாதிகளின் வாரிசுகள், மனைத்தொழில் அதிபா்கள் பலா் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் யாரையும் தப்பவிட மாட்டோம்.
போதைப் பொருள் விவகாரம் தொடா்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது விசாரணை தீவிரப்படுத்தப்படும். இந்த விசாரணையில் பெரும்புள்ளிகள் பலா் சிக்கியுள்ளனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கன்னடத் திரைப்படக் கலைஞா்கள், பாடகா்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக பெண் உள்ளிட்ட 3 பேரை தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனா். அதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் போதைப் பொருள் விவகாரம் பூதாகரமானது. இந்த விவகாரத்தில் 14 போ் மீது வழக்கு பதிந்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி, கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் வீரேன் கன்னா உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.