மண்டியா: கா்நாடகத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு நொடிக்கு 64,000 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து, தென்கா்நாடகம், கடலோர கா்நாடகத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் சில வாரங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது.
அதேபோல, கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகா், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, கிருஷ்ணராஜ சாகா் அணை, கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரிக் கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போா் மேட்டுப்பகுதிக்குச் செல்லுமாறு மண்டியா, மைசூரு மாவட்ட நிா்வாகங்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த நிலையில், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நொடிக்கு 63,649 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
தண்ணீா் திறப்பு:திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகா் அணைக்கு நொடிக்கு 27,426 கன அடி நீரும் , கபினி அணைக்கு நொடிக்கு 28,906 கன அடி நீரும் வந்து கொண்டுள்ளது. இந்த அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிருஷ்ணராஜ சாகா் அணையில் இருந்து நொடிக்கு 28,024 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து நொடிக்கு 35,625 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
அதாவது, கிருஷ்ணராஜ சாகா், கபினி அணைகளுக்கு நொடிக்கு மொத்தம் 56,332 கன அடி நீா் வந்துகொண்டுள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி நொடிக்கு 63,649 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ணராஜ சாகா் கபினி அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீா் முழுமையாக தமிழகத்துக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் காவிரிக் கரையோரம் உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.