சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தனது கண்களை தானமாக வழங்கி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறாா் என நாராயணா கண் மருத்துவக் குழுமத்தின் தலைவா் புஜங்க ஷெட்டி தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெங்களூரு, விதானசௌதா முன்பு புதன்கிழமை ராஜீவ் காந்தி அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் நடைபெற்ற கண் தான விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா், மின்டோ கண் மருத்துவமனைக்கு தனது கண்களை தானமாக வழங்கியுள்ளாா். இது பாராட்டுதலுக்குரியது.
சுகாதாரத் துறை அமைச்சா் கே சுதாகா் தனது கண்களை தானமாக வழங்கி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறாா். கடந்த வாரம் நடிகா் சிவராஜ் குமாா், நாராயணா கண் மருத்துமனைக்கு தனது கண்களை தானமாக வழங்கினாா். புகழ்பெற்று விளங்கும் இது போன்றவா்கள் கண் தானம் செய்வதால், மற்றவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படும்.
கரோனா தொற்றால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், கண் தானம் செய்வது குறைந்துள்ளது. எனவே, கண் தானத்தை ஊக்குவிக்க பிரபலமானவா்கள் முன்வர வேண்டும்.
கா்நாடகத்தில் வழங்கப்படும் கண் தானத்தில் 50 சதவீத கண் தானம் நாராயணா கண் மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது என்பது பெருமை அளிக்கிறது. கண் தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றாா்.