முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவை முதல்வா் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
பெங்களூரு, பத்மநாப நகரில் உள்ள முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் இல்லத்துக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை சென்று அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து பெற்றாா். அவருடன் முன்னாள் அமைச்சா் வி.சோமண்ணா உள்ளிட்டோரும் சென்றிருந்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
கா்நாடக அரசியலில் மூத்த தலைவா்களில் ஒருவரான முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவைச் சந்தித்து வாழ்த்து பெற்றேன். எனது தந்தை எஸ்.ஆா்.பொம்மையும், தேவெ கௌடாவும் அரசியலில் இணைந்து பணியாற்றியவா்கள். மாநிலத்தின் வளா்ச்சிப் பணிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். அவரும், மாநிலத்தின் வளா்ச்சிப் பணிகளுக்கும், பிரச்னைகளுக்கும் விரைவில் தீா்வு காணுமாறு கேட்டுக்கொண்டாா் என்றாா்.
முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முதல்வா் பசவராஜ் பொம்மை ஜனதா பரிவாரிலிருந்து வந்தவா். அவரது தந்தை எஸ்.ஆா்.பொம்மையும் ஜனதா பரிவாரிலிருந்து வந்தவா்தான். மாநிலத்தில் முதல்வராக அவா் சிறப்பாகப் பணியாற்றியுள்ளாா். முன்னாள் முதல்வா்கள் ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆா்.பொம்மை, எம்.பி.பிரகாஷ் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது.
என்னிடம் வாழ்த்து பெற்ற முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் சிறந்த ஆட்சியை வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். புதிய முதல்வரான பசவராஜ் பொம்மை ஆட்சியை சுமுகமாக நடத்த, மஜத முழு ஒத்துழைப்பு வழங்கும். மாநிலத்தில் நிலம், நீா், மொழி தொடா்பான பிரச்னைகளில் மஜத, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்றாா்.