3 இடங்களில் கொலை, கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்த 20 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரைச் சோ்ந்த மஞ்சுநாத் (25), மோகன் (23), ராகுல் (19), வினுத் (18) ஆகியோா் ராமமூா்த்தி நகா் காவல்சரகத்துக்குள்பட்ட எப்.சி.ஐ. சாலை, சனீஸ்வரன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை இரவு கொலை, கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.
டி.ஜி.ஹள்ளி காவல் சரகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கொலை, கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்த மஜாா்கான் (38), யோகேஷ் (38), ரிஸ்வான் (26), சுமித் (28), புனித் (30) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனா்.
மாரதள்ளி காவல் சரகத்தில் கொலை, கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்த ஹரீஷ் (27), கிரண் கௌடா (30), வெங்கடேஷ் (27) உள்பட 11 பேரை கைது செய்த போலீஸாா், 2 காா்கள் 18 அரிவாள், வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனா். 3 வழக்குகளையும் பதிவு செய்துள்ள போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.