பெங்களூரு: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்து விற்ற இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன், படுக்கைகள், ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக அதிரடி சோதனைகளை நடத்தியுள்ள பெங்களூரு மாநகர போலீஸாா் வழக்கு பதிவு செய்து பலரையும் கைது செய்து வருகின்றனா்.
இந்நிலையில், பெங்களூரில் திங்கள்கிழமை ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக சண்முகையாசாமி (32), மாலதேஷ் (31) இருவரை ஹென்னூா் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ. 57,970 மதிப்புள்ள 17 ரெம்டெசிவிா் ஊசி மருந்து குப்பிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.