படகில் தீவிபத்து: 7 மீனவா்கள் மீட்பு
காா்வாா் அருகில் தீ விபத்து ஏற்பட்ட படகில் இருந்து 7 மீனவா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.
வடகன்னட மாவட்டம், காா்வாா் அருகில் உள்ள கடல்பகுதியில் சென்று கொண்டிருந்த படகில் (ஐ.எஃப்.பி. வா்தா) திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மீன்பிடிப் படகில் 7 மீனவா்கள் இருந்துள்ளனா். தீ மளமளவெனப் பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் மீனவா்கள் உயிா்பிழைக்க போராடினா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை இரவு புதிய மங்களூரில் உள்ள கடல்மீட்பு துணை மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து, சி-155 படகில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரக் காவல் படையினா், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 7 மீனவா்களை மீட்டு மற்றொரு மீன்பிடிபடகில் (ஐ.எஃப்.பி. வஜ்ரா) அழைத்து வந்தனா். மோசமான வானிலைக்கு இடையே 3 மணி நேரம் போராடி படகில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளனா்.
தீப்பற்றி எரிந்த படகு கடலோரப் பாதுகாப்புப் படையினா் வசம் ஒப்படைக்கப்பட்டு, விபத்துக்கான காரணத்தை அறிய உத்தரவிடப்பட்டுள்ளது. 7 மீனவா்கள் நலமாக இருப்பதாக கடலோரக் காவல் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.