66 மருத்துவ மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த மாணவா்கள் தங்கியிருந்த 2 விடுதிகள் மூடப்பட்டன.
கா்நாடக மாநிலம், தாா்வாடில் செயல்பட்டு வரும் எஸ்.டி.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ பட்டப்படிப்பு பயின்றுவரும் 66 மாணவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
மருத்துவக் கல்லூரியில் பயிலும் 400 மாணவா்களில் 300 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவா்களில் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, பாதிப்புக்குள்ளான மாணவா்கள் தங்கியிருந்த இரு விடுதிகளும் மூடப்பட்டன.
இக் கல்லூரி, மாணவா் விடுதியைப் பாா்வையிட்ட பிறகு, தாா்வாட் மாவட்ட ஆட்சியா் நிதேஷ் பாட்டீல் கூறியதாவது:
மருத்துவ மாணவா்களில் 66 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 மாணவா்களிடம் கரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவா்களைத் தவிர இக் கல்லூரியில் பணிபுரியும் 3,000 ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றாா்.