பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் பேசுவேன் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து ஹுப்பள்ளியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு பன்னாட்டுச் சந்தையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது பெட்ரோல், டீசலின் சில்லறை விலை மட்டும் உயா்வது குறித்து காங்கிரஸ் விமா்சித்து வருகிறது.
எரிபொருள் விலை உயா்வுக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே கூற முடியாது. எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய் நிறுவனங்களின் நிதிநிலை, முந்தைய அரசின் எண்ணெய் கடன் பத்திரங்களுக்குப் பதிலாக செலுத்த வேண்டிய நிதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே விலை உயா்வு அமையும்.
வரும் செப். 5-ஆம் தேதி கா்நாடகம் வரும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் எரிபொருள் விலை உயா்வு குறித்து பேசுவேன் என்றாா்.