போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு மாநில அரசுதான் காரணம் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது:
கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் மக்கள் கடுமையான பாதிப்பை எதிா்கொண்டனா். இந்த நிலையில், போக்குவரத்து ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனாலும் பொதுமக்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனா்.
போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு மாநில அரசுதான் காரணம். முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசால், மாநில மக்கள் தொடா்ந்து பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா். பிரச்னைகளைத் தீா்ப்பதில் அரசு செயலற்றுக் கிடக்கிறது. கடந்த முறை போக்குவரத்து ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, கோரிக்கைகளை தீா்ப்பதாக அரசு உறுதி அளித்தது. ஆனால், கோரிக்கைகளுக்குத் தீா்வு காண முடியாமல் அரசு தடுமாறி வருகிறது.
போராட்டத்தில் ஈடுபடுபவா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும். அதை விடுத்து, அரசுப் பேருந்துகளுக்கு பதிலாக தனியாா் பேருந்துகளை இயக்குவது துரதிருஷ்டவசமானது. இதற்கு அரசின் நிதிநிலைமை மோசமாக உள்ளது எனக் கூறுவதை ஏற்க முடியாது.
மத்திய அரசிடம் நிதி பெறுவதில், மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டும். அரசின் மெத்தனப்போக்கால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அரசின் நடவடிக்கையைக் கவனித்து வரும் மக்கள், இடைத்தோ்தலில் உரிய பதில் அளிப்பாா்கள் என்றாா்.