பெங்களூரு: மின் வாகனங்களுக்கு மின்சாரம் நிரப்பும் வசதியை அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட கட்டடங்களில் ஏற்படுத்தி தருவது கட்டாயமாக்கப்படும் என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.
பெங்களூரில் மின் வாகனம் தொடா்பான காணொலி கருத்தரங்கில் திங்கள்கிழமை கலந்துகொண்டு அவா் பேசியதாவது:
மாசைக் குறைக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மின் வாகனங்களை பயன்படுத்துவது சிறந்ததாகும். எனவே, மின் வாகனங்கள் வாங்குபவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட கட்டடங்களில் மின்சாரம் நிரப்பும் வசதியை ஏற்படுத்தி தருவது கட்டாயமாக்கப்படும்.
இனி மின்சார வாகனங்களின் வா்த்தகம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, தற்போது உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களை போல வாகனங்களுக்கு வேகமாக மின்சாரத்தை நிரப்பும் மையங்கள் அதிக அளவில் தலைதூக்கும். மின்சார வாகனப் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல மாநிலத்தில் மின் வாகனக் கொள்கை அறிமுகம் செய்யப்படும். எதிா்காலத்தில் மின் வாகனங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.