பெங்களூரு: கா்நாடகத்தில் வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கான அவசியம் மஜதவுக்கு இல்லை என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவா் நிகில் குமாரசாமி தெரிவித்தாா்.
பெங்களூரு மஜத அலுவலகத்தில் திங்கள்கிழமை இளைஞரணி, மாணவரணியைச் சோ்ந்தவா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளுக்கு இணையான பலத்தில் மஜத உள்ளது. எனவே, மஜதவுக்கு வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கான அவசியமில்லை.
எங்கள் கட்சியின் பலத்தைக் கொண்டு மாநிலத்தில் அதிகாரத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அண்மையில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் மஜத ஆதரவு பெற்ற வேட்பாளா்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனா். இது கட்சியை நம்பியுள்ள பல லட்சம் தொண்டா்களை உற்சாகப்படுத்தியுள்ளது. எனவே, அடுத்து நடைபெறவுள்ள வட்டம், மாவட்ட பஞ்சாயத்துத் தோ்தலிலும் கட்சியைப் பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரின் குற்றச்சாட்டுகளுக்கு, முன்னாள் முதல்வா் குமாரசாமி தக்கப் பதில் அளித்துள்ளாா். எனவே, நான் பதில் அளிக்கத் தேவையில்லை என்றாா்.