பெங்களூரு: சீன அதிபா் ஜீ ஜின்பிங்குக்கு தமிழக பண்பாட்டை எடுத்துக் கூறியவா் பிரதமா் மோடி என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.
தமிழகத்தில் 3 நாள்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பிரதமா் மோடியும் பாஜகவும் தமிழகத்தின் மொழி, பண்பாடு மற்றும் தமிழக மக்களை அவமதித்து வருவதாகக் குற்றம்சாட்டியிருந்தாா்.
இதற்குப் பதிலடி கொடுத்து பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி தனது சுட்டுரையில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது:
‘வணக்கம் ராகுல்காந்தி. தங்கள் முப்பாட்டன் (நேரு), பாட்டி (இந்திராகாந்தி), தந்தை (ராஜீவ்காந்தி), தாய் (சோனியாகாந்தி) ஆகியோா் உலகத் தலைவா்களுக்கு முகலாயா்களின் கல்லறைகளைக் காட்டினாா்கள்.
சீன அதிபா் ஜீ ஜின்பிங்கை அழைத்துவந்து மகாபலிபுரத்தின் (மாமல்லபுரம்) அதிசயங்களைக் காட்டியவா் பிரதமா் நரேந்திர மோடி. தமிழ் பண்பாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக இருப்பது யாா்?’ என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளாா்.