வீடுகளுக்குச் சென்று குப்பை சேகரிப்பதற்கு கட்டணம் வசூலிக்கும் எண்ணம் பெங்களூரு மாநகராட்சிக்கு இல்லை என அதன் ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மின்வாரியம், குடிநீா் வடிகால் வாரியங்கள் கட்டணம் வசூலிப்பதைப் போல, மாநகராட்சி ஊழியா்கள் வீடுகளுக்குச் சென்று குப்பை சேகரிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. அது போன்ற எண்ணம் எதுவும் தற்போது மாநகராட்சிக்கு இல்லை.
நகர வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் தலைமையில் திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதி முதல் பெங்களூரில் குப்பை அள்ளுவது, சேகரிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொள்ளும். துப்புரவுத் தொழிலாளா்கள் சாலையை சுத்தப்படுத்துவது, மாநகராட்சி கழிவறை நிா்வாகத்தை தவிா்த்து, மற்றவைகளை அந்த நிறுவனமே கையாளும். உலா், ஈர குப்பைகள் மட்டுமின்றி, நெகிழி உள்ளிட்டவைகளை சேகரித்து பிரிக்கும் பணியையும் திடக்கழிவு மேலாண்மை நிறுவனமே செய்ய உள்ளது என்றாா்.