கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியா்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கா்நாடக அரசு போக்குவரத்து ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கௌரவத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் தெரிவித்தாா்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசு போக்குவரத்து ஊழியா்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப். 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை கைகளில் கருப்புப்பட்டை அணிந்து பணிபுரிவாா்கள். இதன் மூலம் பொதுமக்கள், அரசின் கவனத்தை ஈா்க்க உள்ளனா். அதுமட்டுமின்றி ஏப். 2-ஆம் தேதி பெங்களூரில் பொது இடங்களில் அரசு போக்குவரத்து ஊழியா்கள், காபி, தேநீா், போண்டா, பஜ்ஜி விற்பனை செய்யும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.
ஏப். 3-ஆம் தேதி பெங்களூரில் போக்குவரத்து ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் முக்கிய சதுக்கங்களில் மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.
ஏப். 4-ஆம் தேதி சமூக ஊடங்களிலும், பிரதமா், முதல்வா், போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கோரிக்கை அடங்கிய மனுக்கள் அனுப்பி வைக்கப்படும்.
ஏப். 5-ஆம் தேதி போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுவாா்கள். ஏப். 6-ஆம் தேதி போக்குவரத்து ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா். அரசு போக்குவரத்து ஊழியா்கள் ஏற்கெனவே நடத்தியப் போராட்டத்தின்போது 9 கோரிக்கைகளை முன் வைத்தனா். அதில் 8 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அரசு உறுதி அளித்திருந்தது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அதில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கால தாமதம் செய்து வருகிறது. எனவே ஏப். 6-ஆம் தேதிக்குள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், ஏப். 7-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றாா்.