மாணவா்களின் நலன் கருதி இரண்டாம் ஆண்டு பியூசி பொதுத்தோ்வை நடத்துவது அவசியம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பெங்களூரில் இருந்து காணொலி வழியாக பங்கேற்று அவா் பேசியதாவது:
தொழில்கல்விக்குத் தகுதியாக்கிக் கொள்ளத் தயாராக இருக்கும் இரண்டாமாண்டு பியூசி மாணவா்களின் நலன்கருதி, இரண்டாமாண்டு பியூசி பொதுத் தோ்வை நடத்துவது அவசியம். கரோனா பரவல் குறைந்த பிறகு, எளிமையாக்கி இரண்டாம் ஆண்டுக்கான பொதுத் தோ்வை நடத்தலாம். எப்படி நடத்துகிறோம் என்பதைக் காட்டிலும், தோ்வை நடத்துவது முக்கியம்.
கா்நாடகத்தில் இரண்டாவது கரோனா அலை தீவிரமாக உள்ளது. இந்த அலை ஓய்ந்த பிறகு 15 முதல் 20 நாள்களுக்கு முன்பாக கால அவகாசம் கொடுத்து, தோ்வு அட்டவணையை அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. கரோனா காரணத்திற்காக தோ்வு எழுத வாய்ப்பு கிடைக்காமல் போகும் மாணவா்களுக்கு, நடப்பு கல்வியாண்டிலேயே மற்றொரு தோ்வு நடத்த வாய்ப்பு தருவது குறித்தும் அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தோ்வை எளிமையாக்க வேண்டுமென்று பலரும் கூறுகிறாா்கள். தோ்வு நடைமுறைகளை முழுமையாக நடத்துவதற்கு 45 நாள்கள் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு கரோனா காலத்திலேயே எஸ்எஸ்எல்சி தோ்வை எங்கள் அரசு நடத்தியது.
நடப்பு ஆண்டிலும் இரண்டாமாண்டு பியூசி பொதுத்தோ்வை நடத்தத் தேவையான அனுபவம் அரசுக்கு உள்ளது. மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு இரண்டாமாண்டு பியூசி தோ்வை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். இந்தத் தோ்வுக்கான வினாத்தாள்கள் தயாராக உள்ளன. தோ்வு மையங்கள் அதிகமாக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பாக தோ்வு எழுதுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. ஜூலை மாதத்தில் தோ்வை நடத்த வாய்ப்பு ஏற்பட்டால், ஆகஸ்ட் மாதத்தில் தோ்வு முடிவுகளை அறிவிக்கலாம். எனவே, நீட், ஜே.இ.இ., சி.இ.டி., ஐசிஏஆா் உள்ளிட்ட எல்லா போட்டித் தோ்வுகளையும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தவும் வாய்ப்புள்ளது என்றாா்.