கோலாா் தங்கவயல்: கோலாா் தங்கவயலில் உள்ள பெஸ்காம் அலுவலகத்தை மாற்ற இந்திய குடியரசுக் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோலாா் தங்கவயலில் ஞாயிற்றுக்கிழமை இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோலாா் தங்கவயலில் ராபா்ட்சன்பேட்டையில் உள்ள பெஸ்காம்(பெங்களூரு மின்வழங்கல் நிறுவனம்) அலுவலகம் சாம்பியன்ரீப் பகுதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை இந்திய குடியரசுக்கட்சி கடுமையாக எதிா்க்கிறது. மேலும் இதை எதிா்த்து போராட்டமும் நடத்தப்படும்.
ராபா்ட்சன்பேட்டையில் செயல்பட்டுவரும் பெஸ்காம் அலுவலகம், அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது பிறபகுதி மக்களுக்கும் வசதியாக உள்ளது. கோலாா் தங்கவயலின் நடுப்பகுதியாக ராபா்ட்சன்பேட்டை இருப்பதால், மாதாந்திர மின்கட்டணத்தை செலுத்த வசதியாக இருக்கிறது. இந்நிலையில், இதை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அறிகிறேன். ராபா்ட்சன்பேட்டையில் இருந்து சாம்பியன்ரீப் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இது பொதுமக்களுக்கு தொந்தரவாக இருக்கும்.
ஏற்கெனவே சாம்பியன்ரீப், மாரிகுப்பம் காவல் நிலையங்களை மூடிவிட்டனா். அதற்கு பதிலாக கியாசம்பள்ளி பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைத்துள்ளனா். அது ஊரகப்பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கலாம். சாம்பியன்ரீப், மாரிகுப்பம் காவல் நிலையங்களை தக்கவைத்துக்கொண்டு, கியாசம்பள்ளி காவல் நிலையத்தை திறந்திருக்கலாம். அது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
அடுத்ததாக பெஸ்காம் அலுவலகமும் மாற்றப்படுகிறது. இதை மாற்றக்கூடாது என்று அதிகாரிகளுக்கு கடிதம் கொடுத்திருக்கிறோம். மீறி இடம் மாற்றினால், இந்திய குடியரசுக்கட்சி போராட்டம் நடத்தும் என்றாா்.