ஷாம்பெயின் புட்டிகளில் போதைப்பொருள் கடத்தி வந்து விற்பனை செய்த அயா்லாந்து நாட்டைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்து, ரூ. 2.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.
அயா்லாந்து நாட்டைச் சோ்ந்தவா் தோசோ கலீபா (28). 2012-ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த இவா், விசாக் கால அனுமதி முடிந்த பின்னரும் பெங்களூரு கம்மனஹள்ளி முக்கியச்சாலையில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக தங்கி உள்ளாா். மேலும், கோவா மாநிலத்திலிருந்து ஷாம்பெயின் புட்டிகளில் போதைப்பொருள்களை அடைத்து, பெங்களூருவுக்கு கடத்தி வந்து, விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், தோசோ கலீபா கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 2.5 கோடி மதிப்புள்ள எம்டிஎம்ஏ கிறிஸ்டல் பவுடரைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட தோசோ கலீபாவிடம் கோவிந்தபுரா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.