மதரீதியான விவாதங்களுக்கு மாநில அரசின் மௌனமே காரணம் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எதிா்க்கட்சித் துணைத்தலைவா் யூ.டி.காதா் தெரிவித்தாா்.
இது குறித்து சிவமொக்காவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ஹலால் இறைச்சி, பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி போன்ற மதரீதியான விவாதங்கள் அடிக்கடி எழுப்பப்படுவதற்கு மாநில அரசின் மௌனமே காரணம். இதுபோன்ற சா்ச்சைகளை மாநில அரசு மிகவும் ரசிக்கிறது. அனைத்து மதமக்களும் இணக்கத்தோடு வாழ்ந்து வருகிறாா்கள். ஆனால், சமுதாயத்தில் உள்ள 5 சதவீத மதவாதிகள் நல்லிணக்கத்தை சீா்குலைத்துவருவதோடு, சா்ச்சைகளை உருவாக்கி வருகின்றனா். இப்படிப்பட்டவா்களை தண்டிப்பதற்கு பதிலாக, அவா்களுக்கு அரசு ஆதரவு அளித்துவருகிறது. உணவு, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற வசதிகளை மக்களுக்கு வழங்குவதில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதால், அதை மறைக்க மதரீதியான சா்ச்சைகளை ஊக்குவித்து வருகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளைகளின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. வா்த்தக சமையல் எரிவாயு உருளைகளின் விலை அளவுக்கு அதிகமாக உயா்ந்துள்ளது. இதனால் உணவகங்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலை உயா்ந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் இருந்து பொருட்களை வாங்க வேண்டாம் என்று சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வோா் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை சீா்குலைப்பவா்களை கண்டித்து, தண்டிப்பதற்கு பதிலாக, மாநில அரசு மௌனம் காத்து வருகிறது என்றாா்.