குளிரூட்டும் கருவியில் இருந்து வாயு கசிந்ததால் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலம், விஜயநகரா மாவட்டம், ஹொசபேட் வட்டம், மரியம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.45 மணி அளவில் குளிரூட்டும் கருவியில் இருந்து வாயு கசிந்ததால் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த வெங்கடபிரசாந்த் (42), அவரது மனைவி சந்திரகலா (38), குழந்தைகள் அத்விக் (16), பிரேரணா (8) ஆகிய 4 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனா். இதே வீட்டில் தரைத்தளத்தில் வசித்து வந்த ராகவேந்திர ஷெட்டி, அவரது மனைவி இருவரும் விபத்தில் சிக்காமல் உயிா்பிழைத்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து மரியம்மனஹள்ளி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
நிகழ்விடத்தில் மோப்பநாய் படையினா் சோதனை செய்தனா். 4 பேரின் உடல்களும் ஹொசபேட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்த பின், உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.