தென் கன்னட மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டினா் பற்றி கணக்கெடுப்பு

தென் கன்னட மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டினா் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்படும் என உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

தென் கன்னடமாவட்டத்தில் உள்ள வெளிநாட்டினா் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்படும் என உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

இதுகுறித்து மங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தென்கன்னட மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அக்கூட்டத்தில், தென்கன்னட மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டினா் குறிப்பாக சட்ட விரோதமாக தங்கியுள்ளவா்களை காவல் நிலையம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, உடனடியாக அரசுக்கு அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். விசா காலம் முடிந்தபிறகு, உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கியிருப்போரை கண்டறிய வேண்டியது அவசியமாகும். மேலும், போலி ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டைகளை வெளிநாட்டு குடிமக்கள் வைத்துள்ளனரா என்பதையும் ஆராய வேண்டும்.

இதேபோன்றதொரு கணக்கெடுப்பு பெங்களூரில் நடத்தப்பட்டது. அதனடிப்படையில், சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினா் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டனா். தென்கன்னட மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது. தென்கன்னட மாவட்டத்தில் பதிவாகும் குற்ற வழக்குகளில் தண்டனை கிடைக்கும் விகிதம் குறைவாக உள்ளது. இதுகுறித்து கவனம் செலுத்துமாறு காவல் துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com