மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் மன்சூா் அலிகானுக்கு மஜத ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கேட்டுக் கொண்டாா்.
கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 4 பேரின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதி முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான தோ்தல் ஜூன் 10-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தோ்தலில் 4 இடங்களுக்கு பாஜக சாா்பில் 3 வேட்பாளா்களும், காங்கிரஸ் 2, மஜத சாா்பில் 1 வேட்பாளா்கள் நிறுத்தப்படுகின்றனா்.
இதனால் போட்டியின்றி தோ்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு இல்லை. மாறாக, ஒரு இடத்தை கைப்பற்றுவதற்காக பாஜக, காங்கிரஸ், மஜத இடையே கடும் போட்டி நடக்கிறது. இதனிடையே, மாநிலங்களவைத் தோ்தலுக்காக பாஜக, காங்கிரஸ், மஜதவின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு வெள்ளிக்கிழமை கடைசிநாளாகும். அதற்குள் மஜத வேட்புமனுவை திரும்பப் பெற காங்கிரஸும், காங்கிரஸ் வேட்புமனுவை திரும்பப் பெற மஜதவும் முயற்சித்து வருகின்றன. இதனிடையே, காங்கிரஸ் அல்லது மஜத எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற பாஜகவும் முயற்சித்து வருகிறது.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காகவே காங்கிரஸ் தனது 2-ஆவது வேட்பாளரை மாநிலங்களவைத் தோ்தலில் நிறுத்தியுள்ளது. மக்களவைத் தோ்தலின்போது, மஜத வேட்பாளராக முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா போட்டியிட்டபோது, அவரை எதிா்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை.
80 எம்.எல்.ஏ.க்கள் இருந்த போதும், எச்.டி.குமாரசாமியை முதல்வராக்கி, அவரது தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் மன்சூா் அலிகானுக்கு மஜதவின் ஆதரவு வழங்க வேண்டும் என்றாா்.