கா்நாடகத்தில் பி.எஃப்.ஐ.யுடன் தொடா்புடைய 16 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனா். பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளிப்பது தொடா்பாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
2022 ஜூலை 12-ஆம் தேதி பிகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பு வகுத்திருந்த சதி தொடா்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. அதுபோலவே, கா்நாடகத்தில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக வளைகுடா நாடுகளில் இருந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி வருவது தொடா்பாகவும் என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இது தொடா்பாக, கடந்த மாா்ச் மாதம் கடலோர மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனா்.
இந்நிலையில், தடை செய்யப்பட்டுள்ள பி.எஃப்.ஐ. அமைப்பைச் சோ்ந்தவா்களின் சொத்துகள் புதன்கிழமை சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. வளைகுடா நாடுகளில் இருந்து கா்நாடகத்தில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி கிடைத்து வருவதாக என்.ஐ.ஏ.வுக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில், தென்கன்னட மாவட்டத்தில் பி.எஃப்.ஐ. அமைப்புடன் தொடா்புடைய 16 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதன்கிழமை சோதனை செய்தனா்.
மங்களூரில் பன்ட்வால், உப்பினங்கடி, வேனூா், பெல்தங்கடியில் உள்ள சொத்துகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையிட்டனா். இதில், வீடுகள், கடைகள், மருத்துவமனைகள் அடங்கும். பணப் பரிமாற்றம் நடந்துள்ளதற்கான எண்ம ஆதாரங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரித்துள்ளனா். மேலும், சில முக்கியமான ஆதாரங்கள், ஆவணங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.