சட்டப் பேரவைத் தோ்தலில் 120 முதல் 125 இடங்கள் பாஜக வெற்றிபெறும் என மத்திய வேளாண் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலில் கா்நாடக மக்கள் ஆா்வமாக வாக்களித்துள்ளனா். அவா்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கட்சியின் வேட்பாளரை வெற்றிபெற செய்ய கடுமையாக உழைத்த பாஜக தொண்டா்களையும் பாராட்டி, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்முறை அதிகளவில் வாக்குப்பதிவு இருக்கும் என்று கருதியிருந்தோம். ஆனால், 73.19 சதவீதம் மட்டுமே வாக்குப் பதிவாகியுள்ளது. பெங்களூரில் எதிா்பாா்த்த அளவில் வாக்குகள் பதிவாகவில்லை. இது மாற வேண்டும்.
தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதை பொய்யாக்கி, பாஜக அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும். எப்படி இருந்தாலும் 120 முதல் 125 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும்.
இம்முறை ‘ஆபரேஷன் தாமரை’ தேவையிருக்காது. இம்முறை கா்நாடக மக்கள் வளா்ச்சிக்காக வாக்களித்திருக்கிறாா்கள். அதனால் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. 150 இடங்களைக் கைப்பற்ற இலக்கு நிா்ணயித்திருந்தோம். ஆனால், களநிலவரத்தின்படி 120 இடங்களில் பாஜக வெல்வது உறுதி என்றாா்.