சென்னை, பிப்.17: நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பார்வதி கலைக்கூடத்தில் வெள்ளிக்கிழமை "கிறிஸ்து மற்றும் கிருஷ்ணா' என்ற தொல்லியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: நம்மில் பலர் பொழுதுபோக்குக்கு அதிக நேரத்தைச் செலவழிக்கிறோம். அதை மாற்றிக்கொண்டு நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும். இது போன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதன் மூலம் அது சாத்தியமாகும். அப்போதுதான் நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிட முடியும்.
லயோலா கல்லூரி முதல்வர் பி.ஜெயராஜ்: இயேசு கிறிஸ்து, கிருஷ்ணர் என்ற இந்த இரண்டு கடவுள்களும் வரலாற்றோடு தொடர்புடையவர்கள். அவர்களைப் பற்றிய இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. நாட்டுப்பற்று கொண்ட நம்மை எந்த விஷயமும் பிரித்து விடக்கூடாது. அதற்கு இது போன்ற கண்காட்சிகள் நிச்சயம் உதவும்.
இந்திய அறிவியல் கண்காணிப்பு மையத் தலைவர் டி.கே.வி.ராஜன்: "நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்தக் கண்காட்சியின் நோக்கம். இந்த இரண்டு கடவுள்களும் மக்கள் இடையே விழிப்புணர்வை கொண்டு வந்தவர்கள். அதனால்தான் இக்கடவுள்களைப் பற்றிய இந்த தொல்லியல் கண்காட்சியை நடத்துகிறோம்' என்றார். இந்திய அறிவியல் கண்காணிப்பு மையம் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியின் தொடக்க விழாவில் தொல்லியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.