தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் ஆகியோருக்கு மணிமண்டபங்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்து வைத்தார். விடியோ கான்பரன்சிங் முறை மூலம் இந்த மணிமண்டபங்கள் திறக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் ரூ.69 லட்சம் மதிப்பில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மார்பளவு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டிலிருந்து 1949-ம் ஆண்டு வரை தமிழகத்தில் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நினைவைப் போற்றும் வகையில் அவரது சொந்த ஊரான ஓமந்தூரில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று, வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து திண்டுக்கல் பகுதியில் போரிட்டவர் விருப்பாச்சி கோபால் நாயக்கர். அவர் சிவகங்கை ராணி, வேலுநாச்சியார்,
பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருக்குத் தேவையான பாதுகாப்பையும், படைபலத்தையும் வழங்கியவர்.
மேலும், வெள்ளையருக்கு எதிரான போரில் மைசூர் மன்னர் திப்பு சுல்தானுக்கு துணையாக இருந்தவர். மருது சகோதரர்கள் கன்னடத் தளபதி தூண்டாஜிவாக்,
கேரளவர்மா, கோவை ஷாஜிகான் ஆகியோரை இணைத்து தென்னிந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர். இறுதியில் ஆங்கிலேயர்களால் அவரும், அவருடைய மகன் முத்து வெள்ளைய நாயக்கரும் தூக்கிலிடப்பட்டனர்.
நாட்டு விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த கோபால் நாயக்கரின் நினைவாக விருப்பாச்சியில் ரூ.69 லட்சத்தில் அவரது முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மணிமண்டபங்களையும் முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்சிங் முறை மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே புதன்கிழமை திறந்து வைத்தார்.