கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கிராமியக் கலைஞர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை மத்திய தேர்தல் பார்வையாளர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீத வாக்குப்பதிவு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், தேர்தல் நாளை நினைவுகூரும் வகையில், கிராமியக் கலைஞர்கள் பொய்க்கால் வேடமிட்டு மே 16 பதாகை ஏந்தியவாறு, 10 அடி உயரத்தில் நடனமாடி நின்றனர். அதேபோல், மாதிரிவாக்குச்சாவடி மையம் தொடங்கப்பட்டது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, மத்திய தேர்தல் பார்வையாளர் அள்பனா பந்த் சர்மா, மாவட்ட ஆட்சியர், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கு.கோவிந்தராஜ், விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திவாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.