அரசு பெண் மருத்துவர் தற்கொலை

தனது குழந்தையை பார்க்காத ஏக்கத்தில் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் சென்னையில் அரசு பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தனது குழந்தையை பார்க்காத ஏக்கத்தில் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் சென்னையில் அரசு பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை சூளை மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர் மனைவி சுதா மல்லிகா (28). இத்தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சதீஷ்குமாரும், சுதாவும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வந்தனர்.
மேலும், இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டமேற்படிப்பு படித்து வருகின்றனர். குழந்தை தங்களுடன் இருந்தால் படிக்க முடியாது என்பதாலும், குழந்தையின் மீது தனிக்கவனம் செலுத்த முடியாது என்பதால் தங்களின் குழந்தையை அவர்கள் ஈரோட்டில் வசிக்கும் சுதாவின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அதேவேளையில் சுதா, தனது குழந்தையைப் பார்க்காமல் தவித்து வந்தார். இதனால் அவருக்கு மனஅழுத்தமும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சதீஷ்குமார் திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் சுதா தூக்கிட்டு இறந்து கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வேப்பேரி போலீஸார், சுதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com