அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் நயினியம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் ஸ்ரீராம் (22). இவர் பெங்களூருவில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். வாரவிடுமுறையையொட்டி, கடந்த சனிக்கிழமை சென்னைக்கு வந்தார். இந்நிலையில், ஸ்ரீராமின் பெற்றோர் திருப்பதிக்கு சென்றுவிட்டனர்.
இதையடுத்து, ஸ்ரீராம் வீட்டைப் பூட்டிவிட்டு, திருவான்மியூரில் உள்ள நணபரின் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 15 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம், 2 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனர். இரவு வீட்டுக்கு திரும்பிவந்தபோது, கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது கண்டு, ஸ்ரீராம் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.