உயிரைக் காக்குமா ஆன்லைன் மருந்துகள்?

இணையதளத்தில் (ஆன் -லைனில்) மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிப்பது பொதுமக்களின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகளையும், அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்று
உயிரைக் காக்குமா ஆன்லைன் மருந்துகள்?

இணையதளத்தில் (ஆன் -லைனில்) மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிப்பது பொதுமக்களின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகளையும், அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்று மருத்துவத் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இணையதளத்தில் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்து விற்பனையாளர்கள் கடைகளை அடைத்து வரும் 30 -ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

சில்லறை வணிகம்: இந்தியாவைப் பொருத்தவரை 8 லட்சம் மருந்துக் கடைகள் உள்ளன. தமிழகத்தில் மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என்று 40 ஆயிரம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள், இணைப்பு கடைகளை அதிகம் வைத்துள்ள நிறுவனங்களால் மட்டுமே இணையதள விற்பனையை அமல்படுத்த முடியும். இதனால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள மருந்து விற்பனையாளர்கள், மருந்துக் கடைகள் கடும் நஷ்டத்தைச் சந்திக்கும். இதனால் மருந்துக் கடைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

இதனைப் பயன்படுத்திக் கொண்டு மருந்துகள் துறை சாராத கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மருந்து விற்பனையில் கால் பதிக்கும் அபாயம் உள்ளது.

கிராமப்புறங்களில் சேவை: மத்திய அரசானது அனைத்து மருந்துக் கடைகளையும் ஒரே முகமைக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மருந்து விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் விற்பனை விவரங்கள், மருந்துக் கடைகள் கொள்முதல் விவரங்கள், சில்லறை வணிகர்களின் மருந்து விற்பனை விவரங்கள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு விவரங்கள் ஆகியவற்றை இந்த முகமையில் பதிவு செய்ய வேண்டும். இது மருந்து விற்பனையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் ஒரு முடிவு என்றாலும், கிராமப்புறங்களில் மருந்துக் கடைகள் வைத்திருப்போருக்கு இந்த இணைய நவீனம் சாத்தியப்படாது என்று மருந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரைப் பறிக்கும் அபாயம்: இணையதள விற்பனையின் மூலம் தூக்க மாத்திரைகள், கருக்கலைப்பு மாத்திரைகள், மயக்க மருந்துகள் போன்றவற்றை எளிதில் பெற முடியும். போலியாக மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை தயார் செய்து இதுபோன்ற மருந்துகளை இணையதளத்தில் எளிதில் வாங்க முடியும். இதனால் இளைஞர்கள் போதை மருந்துகளை வாங்கவும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் இணையதளத்தில் வாங்கும் தவறான மருந்துகள் உயிரைப் பறிக்கவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஆனந்தன் கூறியது:

மருந்துக் கடைகளின் உரிமம், மருந்துகளின் தரம், தன்மை, காலாவதி மருந்துகள் உள்ளிட்டவற்றை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியும். ஆனால் இணையதள மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்யும்போது, ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. இதனால் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது.மேலும், ஒரே முகமையின்கீழ் மருந்துக் கடைகளின் தரவுகளை சேமித்து வைப்பதற்கு, அந்தந்த கடையின் விற்பனைக்கு தகுந்தாற்போல் கட்டணத்தையும் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே மருந்து உரிமக் கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றை சிறு விற்பனையாளர்களால் சமாளிக்க இயலவில்லை. தற்போது தகவல்களை சேமித்து வைக்கவும் கட்டணம் என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
மாற்று மருந்தின் தாமதம்: இணையதளத்தில் ஒரு மருந்து தவறாக தரப்பட்டாலோ, ஒரு மருந்து ஒவ்வாமை ஏற்படுத்தினாலோ, அதனை மாற்றுவதற்கு மேலும் கூடுதல் நாள்கள் தேவைப்படும்.
மேலும் சில மருந்துகளை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பராமரிக்க வேண்டி வரும். இணையதளத்தில் அவற்றை விற்பனை செய்யும்போது, அவை முறையாகப் பராமரிக்கப்பட்டதா என்ற உத்தரவாதம் இல்லை. இதனால் ஏற்படும் தாமதம் நோயாளியின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும்.
220 உலக நாடுகளுக்கு மருந்துகளையும், 175 நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் தயாரித்து இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இருப்பினும் உள்நாட்டு மருந்து பயன்பாட்டுக்கு சீனா உள்ளிட்ட நாடுகளையே 90 சதவீதம் நம்பியிருக்கிறது.
எனவே, இணையதள விற்பனைக்கு அனுமதி அளித்தால் உள்நாட்டு விற்பனை பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களின் உடல்நலத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று மருத்துவத் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

சாத்தியமற்ற விற்பனை!

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இணையதள மருந்து விற்பனை நடைபெறுகிறது. ஆனால் அங்கு நோயாளிகள் குறித்த மிகப் பெரிய தரவு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனி எண்கள் உள்ளன. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருந்தாளுநர்கள் ஆகிய அனைவரையும் இணைத்து ஒரு தரவு இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வந்து அவரின் பதிவு எண்ணை கொடுத்தாலே போதும். அவர் சிகிச்சை பெற்ற மருத்துவர் முதல் அவர் வாங்கிய மருந்துகள் வரை அனைத்தும் தெரிந்துவிடும். இந்தியாவில் மருத்துவமனைகள், மருத்துவர்கள் சார்ந்த முழுமையான கணக்கெடுப்புகள், தரவு இணைப்பு எதுவும் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை. இப்படியான சூழலில் இணைய மருந்தகங்கள் பாதிப்பையே ஏற்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com