சென்னை மாநகராட்சியின் சார்பில் திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு மடங்கு அதிகமான சொத்து வரியை முறைப்படுத்தக் கோரி குடியிருப்போர் நலச் சங்கங்களின் சார்பில் திருவொற்றியூர் மண்டல அலுவலகம் எதிரே புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் தொழிலதிபர் ஜி.வரதராஜன், என்.துரைராஜ் ஆகியோர் கூறியது: திருவொற்றியூர் மண்டலத்தில் 4 மடங்கு அதிகமாக சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. பெரம்பூரில் சதுர அடிக்கு 90 பைசாவும், வண்ணாரப்பேட்டையில் ரூ.1.30 என்ற அளவிலும் சொத்து வரி வசூலிக்கப்படும் நிலையில், திருவொற்றியூரில் சதுர அடிக்கு ரூ.4.30 என்ற அளவில் சொத்துவரி செலுத்த மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது.
இந்த பாரபட்சமான வரி விதிப்பை முறைப்படுத்தக் கோரி உள்ளாட்சித் துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்னையில் திருவொற்றியூர் பகுதி மக்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக அதிகாரிகள் ஒப்புக் கொண்டாலும் முறையான அரசாணை பிறப்பிக்கப்படாத வரை, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. எனவே, தமிழக அரசு தலையிட்டு உடனடியாக சொத்து வரியை முறைப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிடவேண்டும் என்றனர்.