"அடுத்த 3 மாதத்துக்குள் அனைத்து சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவு பெறும்'

மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக சுரங்க ரயில் பாதை அமைக்கும் அனைத்துப் பணிகளும் அடுத்த 3 மாதத்துக்குள் முழுமையாக நிறைவு பெறும் என மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர்

மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக சுரங்க ரயில் பாதை அமைக்கும் அனைத்துப் பணிகளும் அடுத்த 3 மாதத்துக்குள் முழுமையாக நிறைவு பெறும் என மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் அரவிந்த் ராய் திவேதி கூறினார்.
மே தினபூங்கா முதல் தேனாம்பேட்டை (ஏஜி}டி.எம்.எஸ்) வரை நடைபெற்று வந்த 2 சுரங்கப்பாதை பணிகளில் முதல் சுரங்கப் பாதைக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமை, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெயகெளரி, முதன்மை பொது மேலாளர் விஜயகுமார் சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் அரவிந்த் ராய் திவேதி கூறியதாவது: சென்னையில் நடைபெற்று வரும் சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. 
அடுத்த 3 மாத காலத்துக்குள் அனைத்து சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவடைந்து விடும். மே தின பூங்கா முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான பாதையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றார். இரண்டாம் கட்ட பணிகளுக்காக மாநில அரசு, மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த மாதம் (நவம்பர்) மாநில அரசு ஜப்பான் நிதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
பயணத்துக்கான பொது அட்டை: மாநகர போக்குவரத்து கழகத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து பொதுவான பயண அட்டையை பயணிகளுக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையை முற்றிலுமாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொறுப்பில் கொண்டு வந்து இயக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் மெட்ரோ ரயிலுக்கான சென்னை சதுக்கம் கட்டப்படவுள்ளது. அந்த பகுதியில் பாரம்பரியக் கட்டடங்களான ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், அரசு மருத்துவமனை, தெற்கு ரயில்வே தலைமையகம், சென்ட்ரல் ரயில் நிலையம் இருப்பதால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சதுக்கம் கட்ட பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாக்கும் அமைப்பின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார் அவர்.
தாமதம்: மே தின பூங்கா முதல் தேனாம்பேட்டை (ஏ.ஜி } டி.எம்.எஸ்.) இடையே உள்ள 3 ஆயிரத்து 616 மீட்டர் நீளம் (3.5 கிலோ மீட்டர்) கொண்ட 2 சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் முதல் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு ரயில் நிலையங்களின் வழியாக தேனாம்பேட்டை பகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வரவில்லை. இயந்திரத்தில் உள்ள வெட்டுக்கருவிகளின் தேய்மானமே தாமதத்துக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும் ,அதனை சரிசெய்து, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதே தடத்தில் உள்ள இரண்டாவது பாதையில் இன்னும் 450 மீட்டர் வரை தோண்ட வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com