சென்னை அருகே போரூரில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
போரூர் ஈஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது உறவினர் மகன் ரூபன்குமார் (13). இவர் கார்த்திக் வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ரூபன்குமார் செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் போரூர் ஏரிக்கு குளிக்கச் சென்றார்.
அங்கு அவர், ஆழமானப் பகுதிக்குச் சென்று குளித்தபோது சகதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதனால் பயந்துபோன அவரது நண்பர்கள், ரூபன்குமார் தண்ணீரில் மூழ்கியது குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், ரூபன்குமார் காணாமல்போனதால் கார்த்திக் குடும்பத்தினர் அவரைத் தேடினர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை ரூபன்குமார் போரூர் ஏரியில் மூழ்கியது குறித்து அவரது நண்பர்கள் கார்த்திக்கிடம் தெரிவித்தனர். அவர்கள் உடனே, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார், ரூபன்குமாரை ஏரியில் தேடினர். சிறிது நேரத்தில் போரூர் ஏரியில் இருந்து போலீஸார் ரூபன்குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.