உதவி மருத்துவர் காலி பணியிடங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வினை 9,353 பேர் எழுதினர்.
இதற்காக 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு சென்ற சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தேர்வு நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டார்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நாட்டிலேயே முதன்முறையாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தமிழகத்தில்தான் அமைக்கப்பட்டது. அந்த வாரியத்தின் மூலமாக இதுவரை 10,933 மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள் மற்றும் 4,198 இதர பணியாளர்கள் என 24,664 தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில், உதவி மருத்துவர் (பொதுப் பிரிவு) நிலையில் காலியாக உள்ள 1,884 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, வேலம்மாள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக 10,018 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 9,353 தேர்வெழுதினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.