சென்னை, திருமங்கலத்தில் நகைக் கடையில் கொள்ளையடித்த வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திருமங்கலம் நேரு நகரில் ஏ.கே.எஸ். என்ற பெயரில் நகைக் கடை உள்ளது. 3 தளங்களுடன் கூடிய இந்த நகைக் கடையில் கடந்த 6-ஆம் தேதி ஒரு கும்பல் நுழைந்து, 10 கிலோ தங்கம், ரூ. 5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கொள்ளையர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொடுங்கையூரைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.