சென்னை, தியாகராய நகரில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து குழந்தை இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தியாகராய நகர், துக்காராம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மனைவி மகேஷ்வரி. இத்தம்பதியின் ஒன்றரை வயது மகன் முத்துராஜ். இவர்கள் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசித்து வருகின்றனர்.
மகேஷ்வரி, செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் துணி துவைத்தார். பின்னர் அந்த துணியை பால்கனியில் காயப் போடுவதற்காக சென்றார். அங்கு முத்துராஜை, பால்கனியில் உள்ள சுற்றுச் சுவரில் உட்கார வைத்துவிட்டு மகேஷ்வரி, கொடியில் துணியைக் காயப் போட்டார். அப்போது திடீரென அந்த குழந்தை, நிலைத் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த குழந்தை முத்துராஜை அங்குள்ளவர்கள் மீட்டு, அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் கொண்டுச் சென்றனர். ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட முத்துராஜ் சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தது. இதுகுறித்து மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.