சென்னை சூளைமேட்டில் கார் மோதி 6 வயது சிறுமி உயிரிழந்தது தொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சூளைமேடு வன்னியர் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் துரைவேலன் (40). இவரது மனைவி ஜெயந்தி (33). இத்தம்பதியின் மகள் பவித்ரா (6). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். துரைவேலன், அந்தப் பகுதியில் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகிறார். பவித்ரா, செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் அருகே சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வந்த ஒரு கார் பவித்ரா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பவித்ரா அதே இடத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து, அந்த காரை ஓட்டி வந்த சூளைமேடு வன்னியர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த டேனி வில்லியம்ஸ் மனைவி ப்ரித்தியை (25) கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், ப்ரித்திக்கு ஏற்கெனவே ஓட்டுநர் உரிமம் இருப்பதும், ஆனால் அவருக்கு கார் ஓட்ட போதிய அனுபவம் இல்லாததும் தெரியவந்தது. அத்துடன் அவர் செவ்வாய்க்கிழமை காரை அவர் எடுக்கும்போது பிரேக்கு பதிலாக ஆசிலேட்டரை மிதித்ததால், கார் வேகமாக பவித்ரா மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இந்த விபத்தின்போது டேனி, ப்ரித்திக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்தாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ப்ரித்தியின் கணவர் டேனி வில்லியம்ஸ் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றுகிறார்.