ஆவடி ஓ.சி.எப். தொழிற்சாலையை தனியாருக்கு அளிக்கமாட்டோம், பணியாளர்களை மாற்ற மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (மார்ச் 15) நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசியேஷன்களின் கூட்டுப்போராட்டக் குழு சார்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆவடியில் செயல்பட்டு வரும் ஓ.சி.எப். தொழிற்சாலை (பாதுகாப்பு ஆடை தயாரிப்பு நிறுவனம்) கடந்த 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சுமார் 57 ஆண்டுகளாக ராணுவ வீரர்களுக்கு ஆர்மி லோகோ சீருடைகள், டென்ட் மற்றும் பாராசூட் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது.
மேலும் புல்லட் புரூப் ஜாக்கெட்டையும் வடிவமைத்து சிறந்த தொழிற்சாலையாக செயல்பட்டு வருகிறது. இங்கு 810 பெண்கள் உள்பட 2,110 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு அன்னிய நாட்டு மூலதனத்தை 100 சதவீதம் அனுமதித்து, மேக் இன் இந்தியா என்ற பெயரில் ஓ.சி.எப். நிறுவன உற்பத்திகளை தாரை வார்த்து தொழிற்சாலையை மூடுவதற்கு சதித் திட்டம் தீட்டுகிறது. இதனை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களும் நடத்தப்
பட்டன. அதைத் தொடர்ந்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை (மார்ச்15) கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஆவடியில் உள்ள ஓ.சி.எப். தொழிற்சாலையை தனியாருக்கு வழங்கமாட்டோம் எனவும், பணியாளர்களை மாற்றமாட்டோம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.