விதிமீறல் கட்டடங்கள்: மின் இணைப்பைத் துண்டிக்க மாநகராட்சிக்கு உத்தரவு
சட்டத்தை மீறி விதிகளுக்குப் புறம்பாக கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால், அந்த கட்டடங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மண்ணடியைச் சேர்ந்த மேக்ராஜ் பேகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாடு ஊராட்சி மற்றும் நகர்புறத் திட்ட துறையிடம், தரைத்தளத்துடன்கூடிய இரண்டு மாடிகள் கொண்ட கட்டடம் கட்ட அனுமதி பெற்றேன். சம்பந்தப்பட்ட துறையினரிடம் பெற்ற அனுமதியை மீறி கட்டடத்தைக் கட்டியுள்ளதாக கூறியும், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள பகுதிகளை அகற்ற கோரியும் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
விதிமீறலுக்கான அபராதத் தொகையைச் செலுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தேன். இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள், அந்த கட்டடத்துக்கு சீல் வைத்துள்ளனர். எனவே சென்னை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மனுதாரர் விதிகளுக்குப் புறம்பாக கட்டியுள்ள கட்டடப் பகுதிகளை பயன்படுத்தக் கூடாது. அந்த விதிமீறல் கட்டடப் பகுதிகளை அதிகாரிகள் அகற்ற எந்தத் தடையும் இல்லை. மேலும் தமிழ்நாடு ஊராட்சி மற்றும் நகர்புற சட்டத் திட்டங்களுக்கு புறம்பாக, விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டிருந்தால், அவற்றை சரிசெய்யும் வரை சம்பந்தப்பட்ட கட்டடங்களுக்கான மின் இணைப்பை அதிகாரிகள் துண்டிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.