கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினரின் அத்துமீறலைக் கூட்டுறவுத் தேர்தல் ஆணையமும், அதன் அதிகாரிகளும் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.
திமுக சார்பில் முறைகேடுகள் குறித்து தொடுக்கப்பட்ட வழக்குகளில், பல்வேறு கூட்டுறவு சங்கத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, முறைகேடுகளுக்கு வித்திட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் முடியும் வரை அக்.16-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்கள் அனைத்தையும் கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.