கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் அறுத்து கல்லூரி மாணவர் காயமடைந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரம் பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் அரிகிருஷ்ணன் (19). இவர், மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார். அரிகிருஷ்ணன், தனது மோட்டார் சைக்கிளில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள்நகர் புதிய மேம்பாலத்தில் திங்கள்கிழமை மாலை சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எங்கிருந்தோ வந்த மாஞ்சா நூல் அரிகிருஷ்ணன் கழுத்தில் சிக்கி, அவரது கழுத்தை அறுத்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். உடனே அந்தப் பகுதி மக்கள், அரிகிருஷ்ணனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்க தடை விதிக்கப்பட்டு நிலையில், அந்த நூல் மூலம் பட்டம் பறக்கவிட்டவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.