சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக் குழாய், கணையம், பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை, குடல் சார்ந்த மருத்துவப் பிரிவு பேராசிரியர் மருத்துவர் ஆ.ரா.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள், மருத்துவர் உறவு மேம்படுதல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு குடல் சார்ந்த பாதிப்புகள் குறித்து ஆ.ரா.வெங்கடேஸ்வரன் பேசியது:
உலக அளவில் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் அதிகமுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு கண் முதல் பாதம் வரை உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
இதில், சர்க்கரை நோய் பாதிப்புள்ள 5 முதல் 12 சதவீதம் பேருக்கு ஜீரண சக்தி குறைந்து சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து பாதங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு கல்லீரல், கணையம், உணவுக் குழாய், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு வர அதிகம் வாய்ப்புள்ளது என்றார்.