சென்னை புறநகர் பகுதியில் ஆளில்லாத வீடுகளின் கதவு பூட்டை உடைத்து தொடர்ந்து நகை, பணம் திருடியதாக ஆந்திர இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 150 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பரங்கிமலை, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக பகல் வேளையில் ஆளில்லாத வீடுகளின் கதவு பூட்டை உடைத்து, நகை, பணம் திருடு போயின. இதுதொடர்பாக தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், இத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவது கோடம்பாக்கம் முருகேசன் தெருவைச் சேர்ந்த த.மதன்குமார் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், மதன்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 150 பவுன் தங்க நகை, இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், மதன்குமார் ஆந்திர மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்தவர் என்பதும், அங்கு தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.