வங்கி மேலாளர் மீது சிபிஐ வழக்கு
சென்னையில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் முறைகேடு செய்ததாக, வங்கி மேலாளர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இது குறித்து சிபிஐ தரப்பில் கூறப்பட்டதாவது: நுங்கம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் எஸ்.மணி. ஆட்டோ ஓட்டுநரான இவர், சென்னையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஆட்டோ வாங்குவதற்கு கடன் கேட்டு விண்ணப்பித்தார்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அந்த வங்கியின் மேலாளர் ஏ.சிவாஜி, ஜெனரேட்டர் வாங்குவதற்கு மணிக்கு கடன் தருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது வங்கியின் கணக்கு புத்தகம், காசோலை புத்தகம், ஏடிஎம் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சிவாஜி பெற்றுள்ளார். பின்னர் மணி, பெயரில் வங்கியில் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்து, சிவாஜி கடன் பெற்றுள்ளார்.
அந்த பணத்தின் மூலம் ஒரு ஜெனரேட்டரை வாங்கி, அதை தான் வேலை புரியும் வங்கிக்கே வாடகைக்கு அளித்து சிவாஜி பணம் ஈடுட்டியுள்ளார். இதேபோல மணியின் வங்கி கணக்கை பல்வேறு முறை கேடான பணப் பரிவர்த்தனைக்கு சிவாஜி பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடிகள் அண்மையில் மணிக்கு தெரியவந்ததாம். இது குறித்து மணி, சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இதையடுத்து, சிவாஜி மீது மோசடி சட்டப்பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக விரைவில் சிவாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.