சென்னையில் போலி தொலைத் தொடர்பு நிறுவனம் மூலம் பல லட்சம் மோசடி செய்ததாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1, 500 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டதாவது: இந்திய தொலைத் தொடர்புத்துறை சார்பில் தமிழக சிபிசிஐடியிடம் அண்மையில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், சென்னையில் ஒரு இடத்தில் சிம் பாக்ஸ் மூலமாக வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் உள்ளூர் அழைப்பாக மாற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாகவும், இந்த மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சென்னை, அண்ணாநகர், தங்கம் காலனியில் ஒரு டெலிகம்யூனிகேஷன் நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. இந்த நிறுவனம் இந்திய தொலைத் தொடர்புத்துறையின் எந்த அனுமதியும் இன்றி ஒரு தொலைபேசி இணைப்பு மையமாகவே செயல்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் இயக்குநர் முப்பிரி ரெட்டி, அங்கு பணிபுரிந்த 4 ஊழியர்கள் என 5 பேரை வியாழக்கிழமை கைது செய்தனர். இவர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், மோசடி தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்தக் கும்பலிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட தொலைத் தொடர்பு உபகரணங்கள், 1,500 சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.