பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில் குப்பைகளைச் சேகரிக்க பெருநிறுவனங்களுக்கான சமூகப் பங்களிப்புத் திட்டத்தின்கீழ், ரூ. 3 லட்சம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் இரண்டு வாகனங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் 19,605 தூய்மைப் பணியாளா்கள் 4,027 மூன்று சக்கர மிதிவண்டிகள், 206 கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 5,000 டன் குப்பைகளைச் சேகரித்து வருகின்றனா்.
குப்பை சேகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பேட்டரியால் இயங்கும் 411 மூன்று சக்கர வாகனங்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஸ்டேப் பாங்க் ஆஃப் இந்தியாவின் சமூகப் பங்களிப்புத் திட்டத்தில் பேட்டரியால் இயங்கும் 14 மூன்று சக்கர வாகனங்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக, அப்பல்லோ மருத்துவமனையின் சமூகப் பங்களிப்புத் திட்டத்தின்கீழ், ரூ. 3 லட்சம் மதிப்பிலான 2 வாகனங்கள் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பைகளைச் சேகரிக்கும் பணிக்காக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.