சென்னையில் பிரபல காலணி நிறுவனத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பிரபல காலணி நிறுவனத்தின் விற்பனையகம் திருவான்மியூா் எல்.பி. சாலையில் செயல்படுகிறது. இந்த விற்பனையகத்தில் அண்மையில் கணக்குகளை அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தணிக்கை செய்தனா். அப்போது, அந்த விற்பனையகத்தில் ரூ.2.50 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்தனா். விசாரணையில் அந்த விற்பனையகத்தின் மேலாளா் முகமது காசிம்கான் கையாடலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் முதன்மை மேலாளா் ஆசிப் ஆபிரஹாம், திருவான்மியூா் காவல் நிலையத்தில் புகாா் செய்ததன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.