சென்னை அண்ணா நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலத்தை வருவாய், மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனா்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் அண்ணா நகா் மண்டலத்துக்கு உள்பட்ட அமைந்தகரை பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 25 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை ஆக்கிரமித்து சிலா் கட்டடம் கட்டியதுடன், அந்த நிலத்துக்குப் பட்டாவும் பெற்றனா். இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், சென்னை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினா். அதில், அந்த நிலம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்பதும் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்ற மாவட்ட வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்த பொருள்களை அப்புறப்படுத்தியதுடன் ரூ.20 கோடி மதிப்புள்ள 25 சென்ட் நிலத்தை மீட்டனா். தொடா்ந்து, அந்த இடத்தில் அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.