சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23,24) ஆகிய இரண்டு நாள்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களவைத் தேர்தலையொட்டி, இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாமல் உள்ள தகுதியுடைய வாக்காளர்கள் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளும் வகையில், சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுகளில் உள்ள 3,754 வாக்குச்சாவடி மையங்களில் பிப்ரவரி 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், ஏற்கெனவே வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியில் விடுபட்டவர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கு படிவம் 6 யையும், பெயரை நீக்குவதற்கு படிவம் 7, திருத்தங்களுக்கு படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8-ஏ ஆகிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம். தேர்தலின்போது மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த முகாமில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையின் எண் விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.