பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் கோரிய மனு தள்ளுபடி
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தேர்வு நேரத்தை அதிகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்டின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் பாடத் திட்டங்களிலும், தேர்வு முறைகளிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்தத் தேர்வை எழுத 2.30 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த தேர்வு நேரத்தை 3.15 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும். பொதுத் தேர்வர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்க வேண்டும். விடைத் தாள்கள் வெளியாவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக்கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.